ETV Bharat / city

முல்லைப் பெரியாறு அணை: ஓபிஎஸ்-க்கு துரைமுருகன் பதில்

author img

By

Published : Nov 9, 2021, 7:27 AM IST

முல்லைப்பெரியாறு அணையிலிருந்து தண்ணீர் ஏன் திறந்து விட்டார்கள் என எதிர்க்கட்சி துணைத் தலைவர் ஓபிஎஸ் எழுப்பிய கேள்விக்கு நீர்வள ஆதராத்துறை அமைச்சர் துரைமுருகன் பதிலளித்துள்ளார்.

ஓபிஎஸ்-க்கு துரைமுருகன் பதில்
ஓபிஎஸ்-க்கு துரைமுருகன் பதில்

சென்னை: முல்லைப்பெரியாறு அணையிலிருந்து தண்ணீர் ஏன் திறந்து விட்டார்கள் என எதிர்க்கட்சி துணைத் தலைவர் ஓ.பன்னீர்செல்வம் எழுப்பிய கேள்விக்கு நீர்வள ஆதாரத்துறை அமைச்சர் துரைமுருகன் விளக்கம் அளித்து அறிக்கை வெளியிட்டுள்ளார்.

அதில், "முல்லைப் பெரியாறு அணையைத் திறப்பதற்கான நடைமுறை விதிகளின்படி, திறப்பதற்கு முன்பாக கேரள மாநில அரசுக்கு முன்கூட்டியே தகவல் கொடுக்க வேண்டும் என்ற அடிப்படையில் நீர் கொள்ளளவு அதிகமாக வருவதை அக்.27 அன்று கேரள அரசுக்கும் சம்மந்தப்பட்டவர்களுக்கும், அக்.29 அன்று உபரி நீர் போக்கி மதகுகள் மூலம் தண்ணீர் திறக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டது.

தமிழ்நாடு அலுவலர்களின் முடிவுதான்

அதன்படி அக்.29ஆம் தேதி காலை 7.29 மணிக்குத் தமிழ்நாடு நீர்வளத்துறை அலுவலர்களால் அணையின் மதகுகள் திறக்கப்பட்டன. அந்த நேரத்தில் கேரள நீர்வளத்துறை அமைச்சரும் அம்மாநில அலுவலர்களும் அணையைப் பார்வையிட்டனர்.

எனவே, அணையின் உபரிநீர் போக்கியைத் திறக்கலாம் என்பது அணையைப் பராமரிக்கும் தமிழ்நாடு நீர்வளத்துறை அலுவலர்களால் எடுக்கப்பட்ட முடிவாகும்.

தேதிவாரியாக நீர்மட்டம்

உச்ச நீதிமன்றம் அக்.28ஆம் தேதி அன்று, மத்திய நீர்வள ஆணையம் ஒப்பளித்த நீர்மட்ட அளவுகளை அடிப்படையாகக் கொண்டு வல்லுநர் குழு அணையின் நீர்மட்டம் குறித்து வெளியிடும் அறிவிப்புகளைச் சம்மந்தப்பட்ட மாநிலங்கள் ஏற்றுக்கொள்ள வேண்டும். இருப்பினும், வல்லுநர் குழு தனது முடிவுகள் சூழ்நிலைக்கேற்ப அவ்வப்பொழுது மாற்றிக்கொள்ளலாம் என ஆணை வெளியிட்டது.

மத்திய நீர்வள ஆணையம் ஒப்பளித்த நீர்மட்ட அளவுகளின்படி, அணையின் நீர்மட்டம் அக்.10ஆம் தேதி அன்று 138.50 அடியாகவும், அக்.20ஆம் தேதி அன்று 137.75 அடியாகவும், அக்.31ஆம் தேதி அன்று 138.00 அடியாகவும் இருக்க வேண்டும்.

இந்நிலையில், அக்.27ஆம் தேதி மாலையிலிருந்து அணையின் நீர்மட்டம் அதிகரித்து, அடுத்த நாளை (அக்.28) காலை நீர்மட்டம் 138.05 அடியாகவும், அக்.29 அன்று நீர்மட்டம் 138.75 அடியாகவும் இருந்தது. ஆனால், அனுமதிக்கப்பட்ட நீர்மட்ட அளவுகளின்படி 138 அடியாக இருந்திருக்க வேண்டும்.

142 அடியை எட்டும்

எனவே, ஒப்பளிக்கப்பட்ட நீர்மட்டத்திற்கு மேல் இருக்கும் அதிகப்படியான நீர் அணையின் உபரிநீர் போக்கிகள் வழியாகத் தகுந்த முன்னெச்சரிக்கை அறிவிப்புகள் வெளியிட்ட பிறகுதான் தண்ணீர் திறக்கப்பட வேண்டியதாக இருந்தது. ஆகவே, உபரிநீர் போக்கிகள் வழியாகத் தண்ணீர் திறந்து விடப்பட்டது. அணையின் நீர்மட்டம் நவ. 30ஆம் தேதி அன்று 142 அடியை எட்டும்" எனக் குறிப்பிட்டுள்ளார்.

இதையும் படிங்க: ஜி.என்.செட்டி சாலையில் தேங்கிய மழைநீர்; பொதுமக்கள் அவதி - களத்தில் ஈடிவி பாரத்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.